Monday, April 16, 2012

இலங்கை பிரச்சினையில் மூக்கை நுழைத்து அரசியல் ஆட்டம் ஆடும் ஜெயலலிதா - தேசப்பற்றுள்ள இயக்கம் குற்றச்சாட்டு

இலங்கை விவகாரத்தைக் களமாகப் பயன்படுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆட்டம் ஆடுகின்றார் எனக் குற்றஞ்சாட்டியுள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் இலங்கைப் பயணம் பயனுள்ளதாக அமையவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை இந்திய உறவைப் புதுப்பிக்கும் முனைப்புடனேயே இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கொழும்பு வந்துள்ளது. மாறாகத் தமிழர்கள் மீதுள்ள பாசம் காரணமாக அல்ல என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ பயண்மொன்றை மேற்கொண்டு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று இலங்கை வந்துள்ளது. இந்தக் குழுவில் தமது கட்சி உறுப்பினர்கள் பங்கேற்கமாட்டார்கள் என தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் அறிவித்துள்ளனர் இவர்களின் இந்த அறிவிப்புக் குறித்தும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் இலங்கைப் பயணம் தொடர்பிலும் கருத்து வெளியிடும் போதே தேசப் பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஊடகச் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:

இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை மீறியே எமக்கு எதிராக ஜெனிவாவில் செயற்பட்டது. இந்தியா இவ்வாறு செயற்படவேண்டும் என உறுதியாக அழுத்தம் கொடுத்தவர் ஜெயலலிதாதான். மத்திய அரசை எமக்கு எதிராகத் திருப்பிவிட்டதன் பின்னணியில் இவரே நின்று செயற்பட்டார். இவையெல்லாம் அரசியல் ஆட்டமாகும்.

இலங்கை வரும் இந்திய எம்.பிக்கள் குழுவில் தனது கட்சி உறுப்பினர்கள் உள்ளடங்கினால் அது தனது கௌரவத்துக்கு மதிப்புக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் என்ற காரணத்தைக் கருத்திற்கொண்டே தனது கட்சி எம்.பிக்களைத் தமிழக முதல்வர் தடுத்துள்ளார்.

ஜெனிவா விவகாரத்தால் விரிசல் அடைந்தது எனக் கூறப்படும் இலங்கை இந்திய உறவைப் புதுப்பிக்கும் நோக்கிலேயே டில்லி எம்.பிக்கள் குழு இங்கு வருகின்றது. தமிழர்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி இந்த விஜயம் அமையவில்லை.
இலங்கையில் தமிழர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசுக்கு இந்தியா உதவவேண்டும். அப்படி இல்லையேல் அழுத்தம் கொடுக்கவேண்டும். மாறாக அரசியல் ஆட்டம் ஆடக்கூடாது என்றார்

No comments:

Post a Comment

tamilfast